25 February 2016

இஸ்லாமும் அறிவியலும்!




நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் அறிவியல் உலகம்.பொதுவாக மதங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது எனும் தவறான ஒரு கருத்தாக்கம் மக்களிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கருத்து வேறு எந்த மதத்திற்கும் பொருந்திப்போகலாம்,இஸ்லாத்துடன் எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது.காரணம் இஸ்லாம் அறிவியல் மார்க்கம்.அறிவை ஊக்கப்படுத்தும் மார்க்கமாகும்.


இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல,அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமுமாகும். அது அறிவு ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம்
அதிசயிக்கத்தக்கதாகும்.

படைத்தவனை தெரிந்துகொள்ள படைப்புக்களைப்பற்றி சிந்தனை செய்வதும் வணக்கம் என்று சொல்கிறது ஒரு நபிமொழி.

تفكروا في كل شيء ولا تتفكروا في الله

رواه أبو نعيم في الحلية

عن أبي الدرداء قال" تفكر ساعة خير من قيام ليلة

ابن عساكر

சிறிதுநேரம் சிந்தனை செய்வது இரவு முழுவதும் வணக்கம் செய்வதை விட சிறந்ததாகும்.

இமாம் ஷாபி ரஹ் அவர்களின் இல்லத்தில் விருந்தாளியாக தங்கிய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் இரவுத்தொழுகையை நிறைவேற்றவில்லை.

இரவுத்தொழுகையில் பேணுதல் இல்லாதவர்களை பெரும்குற்றவாளிகளாக பார்க்கப்பட்ட பொன்னான காலம் அது.எனவே இமாம் ஷாபி ரஹ் அவர்கள் தங்களின் மாணவர் அஹ்மத் ரஹ் இரவுத்தொழுகை தொழாமல் தூங்கிவிட்டதை சகித்துக்கொள்ள முடியாமல் கேட்டுவிட்டார்கள்.

அதற்கு பதில் கூறிய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள்-

உஸ்தாத் அவர்களே!நான் இன்று தஹஜ்ஜுத் தொழவில்லை என்பது உண்மை தான்,காரணம் அதைவிடவும் சிறப்பான ஒரு ஆய்வில் ஈடுபட்டிருந்தேன்.

عَنْ أَنَسٍ قَالَ : كَانَ ابْنٌ لأُمِّ سُلَيْمٍ يُقَالُ : لَهُ أَبُو عُمَيْرٍ . كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُبَّمَا مَازَحَهُ إِذَا جَاءَ ، فَدَخَلَ يَوْمًا يُمَازِحُهُ فَوَجَدَهُ حَزِينًا فَقَالَ : " مَا لِي أَرَى أَبَا عُمَيْرٍ حَزِينًا ؟ ! " فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ مَاتَ نُغَرُهُ الَّذِي كَانَ يَلْعَبُ بِهِ فَجَعَلَ يُنَادِيهِ : " يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ " . أَخْرَجَهُ الْبُخَارِيُّ

உம்மு சுலைம் ரலி அவர்களின் மகன் அபூ உமைர் என்ற சிறுவரிடம் நபி ஸல் அவர்கள் நகைச்சுவையாக பேசுவார்கள்.

ஒரு நாள் அச்சிறுவரை சந்திக்க நபி ஸல் அவர்கள் வந்தபோது-அச்சிறுவர் கவலையாக இருக்கக்கண்டார்கள்.

காரணம் கேட்டபோது,அவர் வளர்த்த சிட்டுக்

குறுவி இறந்து போய்விட்டது என்று பதில் சொன்னார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள்-அபூ உமைர்!உன் சிட்டுக்குறுவிக்கு என்ன ஆகிவிட்டது? என அச்சிறுவரிடம் துக்கம் விசாரித்தார்கள்.

இரவு முழுவதும் இந்த ஹதீஸை ஆய்வு செய்து எழுபது சட்டங்களை நான் எடுத்துள்ளேன் என கூறினார்கள்,அதில் ஒருவருக்கு புனைப்பெயர் சூட்டலாம்,குழந்தைகளிடமும் துக்கம் விசாரிக்க வேண்டும்,பறவைகளை வளர்க்கலாம் போன்ற பல்வேறு சட்டங்களை நான் கண்டுபிடுத்துள்ளேன் என இமாம் அவர்கள் கூறியபோது-உண்மை தான்! நீங்கள் செய்த இந்த ஆய்வு இரவு முழுவதும் வணங்குவதைவிடவும் அல்லாஹ்விடம் மதிப்பானது என்று இமாம் ஷாபி ரஹ் அவர்கள் கூறினார்கள்.

அறிவியலின் தொடக்கம் எது?

அல்லாஹுத்தஆலா நபி ஆதம் அலை அவர்களை படைத்தபோது அவர்களுக்கு  முதலாவதாக அறிவை கற்றுக்கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது.

                           وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا 

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்.(அல் குர்ஆன்:2:31)

அந்த அறிவு படைப்புக்கள் அனைத்தின் பெயர்களை பற்றியது.

இந்த வசனத்தின் விரிவுரையில் அல்லாமா இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறும்போது- அஸ்மாஃ எனும் அல்லாஹ்வின் வார்த்தையின் நோக்கம் உலகின் அனைத்துப்பொருட்களும் அதன் தன்மைகளும் என கூறுகிறார்கள்.

அல்லாமா ஸமக்ஷரி ரஹ் அவர்கள் தங்களின் கஷ்ஷாப் என்ற தப்ஸீரில்

ஆதம் அலை அவர்களுக்கு உலகின் அனைத்துப்பொருட்களின் பெயர்களும் அதன் பயன்பாடுகளையும் அல்லாஹ் கற்றுக்கொடுத்ததாக கூறுகிறார்கள்.

இந்த வசனத்தின் தப்ஸீரில் இமாம் ராஸி ரஹ் அவர்கள் குறிப்பிடும்போது-

பூமியின் அனைத்து வஸ்துக்கள் பற்றிய விஞ்ஞானத்தை கற்றுக்கொடுத்ததாக கூறுகிறார்கள்.

சுறுங்கக்கூறுவதானால்,முதல் மனிதர்  படைக்கப்பட்டபோது அவர்  வாழப் போகும் பூமியின் பொருட்கள் பற்றிய அறிவையும் கொடுத்தே அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

ஸயின்ஸும் ஷரீஅத்தும்!

இன்றைய அறிவியலுக்கும் இஸ்லாத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு,அது என்னவெனில் இன்றைய அறிவியல் தங்கத்தை நிறுக்கிற தராசு போன்றது,இஸ்லாம் மலை போன்றது.

சில கிராம்களை மட்டும் எடைபோடும் தராசுக்கொண்டு இஸ்லாம் எனும் மலையை நிறுத்துவிடமுடியாது.அப்படி செய்ய முற்பட்டால் அவனை விட முட்டாள் யாரும் இல்லை.

எனவே இஸ்லாம் வெறும் சயின்ஸை மட்டும் மூலமாக கொண்ட மார்க்கமல்ல,மாறாக சயின்ஸ் இஸ்லாத்தில் ஒரு பகுதி மட்டுமே!

இன்றைய விஞ்ஞான உலகம் கண்டு பிடித்திருக்கிற,அல்லது கண்டுபிடித்துக் கொண்டிருக்கிற,அல்லது இனி கண்டுபிடிக்கப்போகிற அனைத்தைப்பற்றியும் இஸ்லாம் முழுமையாகவும் தெளிவாகவும்,தீர்க்கமாகவும் பேசிவிட்டது.

இவ்வுலகில் இருக்கும் எல்லா படைப்புகளும் மனிதனுக்காக! இந்த  மனிதன் இறைவனுக்காக! இதுவே இஸ்லாத்தின் அடிப்படை சித்தாந்தம்.

இன்றைய ஐரோப்பியா -அறிவியல் உலகின் ஆசானாக பார்க்கப்படுகிறது, ஆனால் இதற்குப்பின்னால் மறைந்திருக்கிற முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்புக்களை வசதியாக மறந்துவிட்டனர்.

அல்குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல் அவர்களின்  போதனைகளாலும் வழி காட்டப்பட்ட  முஸ்லிம்கள் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கும், பல கண்டு பிடிப்புகளுக்கும் முன்னோடிகளாக அமைந்தனர்.

 ஐரோப்பா இருளில் சூழ்ந்திருந்த மத்திய காலப் பிரிவில் இஸ்லாமிய உலகில் அறிவுத்தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் அறிவின் அனைத்துத் துறைகளுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்தனர்.

முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆட்சி செய்தபோதுதான் ஐரோப்பா அறிவு ஆராய்ச்சியையும், கலாசாரப் பண்பாட்டையும் பெற்றுக்கொண்டது என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.

'முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெய்ன் மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் மிக ஒளிமிக்க அத்தியாயங்களில் ஒன்றை உருவாக்கியது. கி.பி. 8ம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கும் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட ஐநூறு ஆண்டு காலத்தில் உலகம் முழுவதும் அறபு பேசும் மக்களே கலாசாரம் மற்றும் நாகரீக ஒளியை ஏந்துகின்றனர். அவர்கள் மூலமாகவே பழமையான அறிவியலும் தத்துவமும் அழியாமல் பாதுகாக்கப்பட்டது. இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.'என்று வரலாற்று ஆசிரியர்  பிலிப் கே. ஹிட்டி  (P.K. Hitti) கூறுகிறார்.

முஸ்லிம்கள் தான் உலகின் அறிவியல் ஆராய்ச்சியின் முன்னோடிகளாகும்.

வானவியலில் இஸ்லாத்தின் சாதனை!

இமாம் நவவீ ரஹ் அவர்கள் ரியாழுஸ்

ஸாலிஹீன் எனும் நூலில் ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

ஒரு ஸஹாபி நபி ஸல் அவர்களின் சமூகத்திற்கு வந்து-அல்லாஹ்வின் தூதரே!சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் இவைகள் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தால் என்ன நடக்கும்?என்று ஒரு கேள்வி கேட்டார்.

எவ்வளவு அருமையான கேள்வி!சாதாரணமாக கேட்டார்.

அதற்கு பதிலளித்த நபி ஸல் அவர்கள் –இவைகள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட மறுத்தால் அல்லாஹுத்தஆலா தன் மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அதன் மீது சாட்டி விடுவான்,அது சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் இவைகள் அனைத்தையும் ஒரு பிடியாக எடுத்து விழுங்கிவிடும் என்றார்கள்.

இந்த பதிலை கேட்டு திகைத்துப்போன அந்த தோழர் அவர்கள்-

அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு பிரமாண்டமான மிருகம் எங்கே வாழ்கிறது?என மீண்டும் கேட்டார்.

அல்லாஹ்வின் வயல்வெளிகளில் உள்ள ஒரு வயல்வெளியில் வாழ்கிறது என்று அண்ணல் நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.

இதை தான் இன்றைய விஞ்ஞானம் விண்வெளியில் நிர்ணயிக்கப்பட்ட அதன் வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிற நட்சத்திரங்களில் ஒன்று அதன் ஓடுபாதையை விட்டு தவறிவிடுமானால் அதை பிடித்து விழுங்கிக்கொள்கிற பிரமாண்டமான கருங்குழி block hole உண்டு என கூறுகிறது.

இதுபோன்ற கேள்விகள் அன்றைய ஸஹாபாக்களுக்கு உதயமானதற்கு காரணம் வானவியல் குறித்து அல்குர்ஆன் சிந்திக்கத் தூண்டுகிறது.

                                     و إلى السماء كيف رفعت

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது?என்று அவர்கள் சிந்திக்க வேண்டாமா? .(அல் குர்ஆன்:88:18)

முஸ்லிம்கள் நவீனதொழில்நுட்பத்திலும்,அறிவியல் ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்தி கூறுகிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் இஸ்லாத்தின் சாதனை!

உலகில் முதலாவது தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை நபி ஸுலைமான் அலை அவர்கள் தான்.

தகவல் தொழில் நுட்பத்தின் முதல் கருவியாக நபி ஸுலைமான் அலை அவர்கள் ஹுத்ஹுத் பறவையை அறிமுகப்படுத்தினார்கள். அது தான் வானொளி,தொலைக்காட்சி,கம்ப்யூட்டர்,லேப்டாப் என பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.எமனிலிருந்து பலஸ்தீனுக்கு ஹுத்ஹுத் கொண்டுவந்த முதல்செய்தியை பற்றி அல்குர்ஆன் இப்படி கூறுகிறது.
اِنِّىْ وَجَدتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ‏ وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ

நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும்,அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி,சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்;அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து,அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. .(அல் குர்ஆன்:27:23,24)

மீண்டும் பலஸ்தீனிலிருந்து எமன் தேசத்துக்கு நபி ஸுலைமான் அலை அவர்களின் கடித்தை கொண்டு சென்றதையும் அல்லாஹ் கூறுகிறான்.

اِذْهَبْ بِّكِتٰبِىْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ‏ 


"என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்;அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி" (என்று கூறினார்) .(அல் குர்ஆன்:27:28)

இதுவே (information technology) இன்பர்மேஷன் டெக்னாலெஜி எனும் தகவல் தொழில் நுட்பத்தின் மாபெரும் புரட்சியாகும்.

இன்று information technology எவ்வளவு உயரத்திற்கு வளர்ச்சி கண்டாலும் அதன் மூலபிதா ஹழ்ரத் ஸுலைமான் அலை அவர்கள் தான் என்பதை மறந்துவிட  கூடாது.

தகவல் தொழில்நுட்பத்தை போலவே மருத்துவத்துறையிலும் இஸ்லாம் மாபெரும் சாதனைகள் படைத்து முன்னோடியாக திகழ்கிறது.

மருத்துவத்தில் இஸ்லாத்தின் சாதனை!

மருத்துவர்களின் தலைவரான அலிசீனா எழுதிய அல் கானூன் பித்திப் எனும் நூல் மருத்துவ உலகின் பைபிளாக கொண்டாடப்படுகிறது.

பலநூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் மருத்துவத்தின் சிம்மசொப்பனமாக பார்க்கப்படுகிறது.

அம்மை நோய் ஒரு தடவை வந்துவிட்டால் இனி வாழ்நாளில் எப்போதும் வராது எனும் மருத்துவ இரகசியத்தை கண்டுபிடித்து உலகிற்கு சொன்னவர் இப்னு ருஷ்த் இல்லையா?

இமாம் திர்மிதி ரஹ் அவர்களை நமக்கு ஒரு முஹத்திஸாக மட்டுமே அறிமுகம்,ஆனால் மருத்துவத்துறையில் அவர்கள்  நிகழ்த்திய சாதனைகள் பிரமிக்கத்தக்கவையாகும்.

திர்மித் எனும் ஊரில் அவர்கள் கட்டிய மருத்துவமனையை பார்த்தவர்களுக்கு தான் அவரின் மருத்துவ திறமை புரியும்.

ஆம்! அவர்கள் கட்டிய ஹாஸ்பிடலின் கீழ் தழத்தில் அறுவை சிகிச்சைக்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.அந்த இடம் கிருமிகளைவிட்டும் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறது.அது ஒரு புதிய உலகம்.

இன்றைய மருத்துவமனைகள் குளிர் சாதன வசதி செய்யப்படுவதும் அந்த இடத்தின் சுத்தத்தை பராமரிப்பதும் ஒரு மருத்துவமனைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாமறிவோம்.

உலகில் எத்துனை மருத்துவர்கள் உருவானாலும் அவர்கள் யாவரும் நபி ஈஸா அலை அவர்களின் ஜூனியர்களே!

எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாத பிறவிக்குறுடையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தி சாதனை படைத்தவரல்லவா?

இது பற்றி அல் குர்ஆன்

 اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ  اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْـــَٔةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ‌‌ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ

நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;.அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன் ஈஸா அலை அவர்கள் கூறினார். .(அல் குர்ஆன்:3:49)

நபி ஸல் அவர்கள் தங்களின் அருமை மகள் பாத்திமா ரலி அவர்களை மிகச்சிறந்த மருத்துவராக வளர்த்தார்கள்.

உஹத் போரில் நபி ஸல் அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டபோது அவர்களுக்கு சிகிச்சையளித்தது அன்னை பாத்திமா ரலி அவர்கள் தான் என்பதை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்.

ஆயுத தயாரிப்பில் இஸ்லாத்தின் சாதனை!

போர் ஆயுதங்கள் தயாரிப்பதிலும்,அதை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதிலும் இன்று முன்னனியில் இருக்கிற ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அதை கொண்டே தன்னை ஒரு வல்லரசாக காட்டிக்கொள்ள முனைகிறது.

ஆனால், இஸ்லாம் ஆயுத தயாரிப்பில் கவனம் செலுத்தி தங்களை பலப்படுத்திக்கொள்ளச்சொல்லி வலியுறுத்துகிறது

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும்,திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். .(அல் குர்ஆன்:8:60)

ஒரு ஸஹாபியின் கையில் மின்னிக்கொண்டிருந்த வாளைப்பார்த்த நபி ஸல் அவர்கள் உன் கையில் என்ன இருக்கிறது?என கேட்டார்கள்.

அப்போது அந்த நபித்தோழர்-இது வாள்,ஒரு கூட்டத்தினர் தாங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர்.நான் அதை விலை கொடுத்து வாங்கினேன் என்றார்கள்.

அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் நீங்களே சொந்தமாக தயாரித்து அதைக்கொண்டு ஜிஹாத் செய்தால் உங்களுக்கு இருமடங்கு நன்மை கிடைக்கும் என்று கூறினார்கள்.

போர் தளவாடங்களை சுயமாக தயாரிக்கச்சொல்லி தங்களின் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

அவ்வாரே என் உம்மத்தில் முதலாவதாக கடல் போர் செய்பவர்கள் சுவன வாதிகள் என நபி ஸல் அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.

போர்கருவிகளை தயார் செய்வதில் முன்னோடியாக நபி தாவூத் அலை அவர்கள் விளங்கியதாக குர்ஆன் கூறுகிறது.

 وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِى السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًـا ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ 

மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.

"வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்" (என்றும் சொன்னோம்.) .(அல் குர்ஆன்:34:10,11)

அவ்வாறே உலகில் முதலாவதாக கப்பல் தயாரித்து புரட்சி செய்த நபி நூஹ் அலை அவர்கள் பற்றியும் அல்குர்ஆன் கூறுகிறது.

وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ‏ 

"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்;அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்;நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்." .(அல் குர்ஆன்:11:37)

இப்படி எல்லா அறிவியல் துறைகளையும் உலகிற்கு அறிமுக படுத்தியவர்கள் முஸ்லிம்கள் தான்.

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது! அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது!

இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

   اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏ 

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)
 வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர்ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்த அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.

பெருவெடிப்புக் கொள்கை!

اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ 

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக,பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை  வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தடுத்து  நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி!

சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.

                   اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا 
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59)
என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.

سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ‌ ؕ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏ 
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

இப்படி அறிவியல்,தொழில்நுட்பம்,மருத்துவம்,ஆயுத தயாரிப்பு என பல்வேறு துறைகளுக்கு இஸ்லாம் முன்னோடியாகவும்,வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம்கள் தங்களின் சுயமுகவரியை துளைத்து விட்டு அப்பாவிகளாக வாழ்ந்துவருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் முஸ்லிம்கள் அறிவியல் யுகத்தில் சாதனைகள் படைக்கும் காலம் வெகு தூரத்தில் என்ற உண்மைகளை நாமம் விளங்கும் வாய்ப்புகளை வல்லோன் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தருவதோடு அவனை பூரணமாக விளங்கி நல்லறங்களை செய்யும் நல்ல முஃமீன்களாக ஆக்குவானாக.

குறிப்பு வழங்கியவர்கள்: மௌலானா நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத்,மௌலானா ஹஜ் நூரானி ஹழ்ரத் தொகுப்பு அப்பாஸ் ரியாஜி








2 comments:

மாஷா அல்லாஹ் அருமை

ماشاء الله لاقوة الا بالله

Post a Comment